தக்கலை காமராஜர் பஸ் நிலையம் பின்புறம் ராமன்பரம்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மின்கம்பம் ஒன்றின் அடிப்பகுதி உடைந்து, மேல் பகுதி முழுவதும் சிதிலமடைந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. மேலும் இந்த மின்கம்பம் தொடர்ந்து பழுதடைந்து தன் உறுதித்தன்மையை இழந்து கொண்டே வருவதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். அந்த வழியாக நடப்பதற்கு பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.
எந்த நேரத்திலும் மின்கம்பம் விழுந்துவிடும் என்ற பீதியில் உள்ளனர். வேகமாக காற்று வீசும் நேரங்களில் அப்பகுதியினருக்கு மேலும் அச்சம் அதிகரிக்கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பம் கீழே விழுந்துவிடாமல் இருக்க கயிற்றால் கட்டிவிட்டு சென்றுள்ளனர். இது பாதுகாப்பான ஏற்பாடாக தெரியவில்லை. எனவே விபத்துகள் ஏற்படும் முன்பு மின்வாரியம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, சிதிலமடைந்த அனைத்து மின்கம்பங்களையும் அகற்ற வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.














