டெல்லி அருகே காஜியாபாத் பகுதியை சேர்ந்தவர் ஹரிஷ் ராணா. சண்டீகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பி.டெக் படித்து வந்தார்.
இவர் தங்கியிருந்த விடுதியின் 4-வது மாடியிலிருந்து கடந்த 2013, ஆகஸ்ட் 20ம் தேதி தவறி விழுந்தார். இதில் அவருக்கு நரம்பிழைத் தண்டில் காயம் ஏற்பட்டது.
சிகிச்சைக்குப் பிறகும் நினைவு திரும்பாத நிலையில், மருத்துவ ரீதியில் உணவும், நீரூட்டமும் அளித்தும் தொண்டையில் சுவாச குழாய் பொருத்தியும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. படுத்த படுக்கையாக இருக்கும் அவருக்கு இடையில் வலிப்பு நோய், படுக்கை புண் ஏற்பட்டு அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
13 ஆண்டுகளாகப் பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் நினைவு திரும்பாததை கருத்தில் கொண்ட பெற்றோர்கள் மகனை கருணைக் கொலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த விவகாரத்தில் நோயாளி ஹரிஷ் ராணாவின் உடல்நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட முதல் நிலை, 2ம் நிலை மருத்துவக் குழுக்களும் மருத்துவ ரீதியில் உணவும் நீரும் அளித்து வருவதை நோயாளியின் நலன் கருதி விலக்க வேண்டும் என்று பரிந்துரைத்தன.
இதைக் கருத்தில் கொண்ட உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது: ஹரிஷ் ராணாவின் உடல் நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட முதல்நிலை, 2-ம் நிலை மருத்துவக் குழுக்களும் உயிர் காக்கும் கருவிகளை விலக்க பரிந்துரைத்த பிறகு, நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் எழவில்லை. இருப்பினும் முதல் நிகழ்வு என்பதால், நோயாளிக்கு பொருத்தப்பட்ட உயிர் காக்கும் கருவிகளை கண்ணியத்துடன் விலக்க வேண்டும்.
முதல்நிலை, 2-ஆம் நிலை மருத்துவக் குழுக்கள் பரிந்துரைத்து, இதுபோன்ற உயிர் காக்கும் கருவிகளை விலக்கி கருணைக் கொலை செய்யக் கோரும் விவகாரத்தில், காமன் காஸ் வழக்கின் தீர்ப்பின் வழிகாட்டுதல்களை பின்பற்றி மருத்துவமனைகளிடம் இருந்து தகவல்களைப் பெற வேண்டும் என்று அனைத்து நீதித்துறை நடுவர்களுக்கும் உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட வேண்டும்.
கருணைக் கொலை விவகாரத்தில் பரிந்துரைகளை அளிக்க அனைத்து மாவட்டங்களிலும் முதல்நிலை, 2-ம் நிலை மருத்துவக் குழுவுக்குப் பதிவு பெற்ற மருத்துவர்களின் பட்டியலை மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி பராமரிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். கருணைக்கொலை விவகாரத்தில் மத்திய அரசு விரிவான சட்டம் இயற்ற பரிந்துரைக்கிறோம். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
கருணை கொலையில் 2 வகை: குணப்படுத்த முடியாத நோயால் நீண்ட காலம் அவதிப்படும் நோயாளியை, அவருக்கு வழங்கப்படும் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களை நீக்குவதன் மூலம் அல்லது மருத்துவ சிகிச்சைகளை நிறுத்துவதன் மூலம் தாமாக உயிரிழக்கச் செய்வது ‘பாசிவ் யூதனேசியா’ எனப்படும் கருணைக் கொலையாகும்.
இதை உரிய வழிகாட்டுதல்களுடன் மேற்கொள்ள சட்டப்பூர்வ அனுமதி உண்டு. இதுபோன்ற நோயாளிகளை நோயிலிருந்து நிரந்தரமாக விடுவிக்கும் வகையில் உயிரிழக்கச் செய்யும் மருந்தை ஊசி மூலம் மரணமடையச் செய்வது ‘ஆக்டிவ் யூதனேசியா’. மற்றொரு வகை கருணைக் கொலையாகும். இந்த நடைமுறை இந்தியாவில் சட்ட விரோதமாக கருதப்படுகிறது.














