ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா உள்ளிட்ட 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் போட்டியை நடத்தும் இந்தியா, பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
கோடிக்கணக்கான ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் வரும் 15-ம் தேதி கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேம தாசா மைதானத்தில் நடைபெறும் வகையில் அட்டவணை வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த போட்டியை மட்டும் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு நேற்று முன்தினம் இரவு அறிவித்தது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு வெளியிட்டு இருந்த எக்ஸ் வலைதள பதிவில், “இஸ்லாமிய குடியரசான பாகிஸ்தான் 2026 ஐசிசி டி 20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஒப்புதல் அளிக்கிறது. இருப்பினும், பிப்ரவரி 15-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக விளையாட திட்டமிடப்பட்டுள்ள போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி களமிறங்காது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பாகிஸ்தான் அரசின் இந்த முடிவானது வங்கதேச கிரிக்கெட் வாரியம் டி 20 உலகக் கோப்பை தொடரில் நீக்கப்பட்டதற்கு ஆதரவாகவும் அரசியல் நோக்கத்தில் எடுக்கப்பட்டதாகவும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். வங்கதேச அணி பாதுகாப்பு காரணங்களை கருதி இந்தியா வந்து விளையாட மாட்டோம், தங்கள் அணி பங்கேற்கும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என ஐசிசி-க்கு கோரிக்கை வைத்திருந்தது. ஆனால் ஐசிசி இதை ஏற்கவில்லை. இதையடுத்து வங்கதேசத்துக்கு மாற்றாக ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்பட்டது.
இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் கிரிக்கெட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியது. அதே நேரத்தில், பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் பலரும், அதிகாரிகளும் நாட்டின் கிரிக்கெட்டைப் பாதிக்கும் எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.
ஆனால் தற்போது அந்நாட்டு அரசு, இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இந்த முடிவை கேள்விக்குள்ளாக்கி உள்ள ஐசிசி, டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிப்பு செய்வது கடுமையான தடைகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது சொந்த நாட்டில் கிரிக்கெட்டுக்கு ஏற்படக்கூடிய குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகால விளைவுகளைக் கருத்தில் கொள்ளும் என்று ஐசிசி நம்புகிறது. ஏனெனில் இந்த முடிவு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுப்பினராகவும் பயனாளியாகவும் இருக்கும் உலகளாவிய கிரிக்கெட் சூழல் அமைப்பைப் பாதிக்கக்கூடும்.
தேசியக் கொள்கை விஷயங்களில் அரசாங்கங்களின் பங்களிப்பை ஐசிசி மதித்தாலும், இந்த முடிவு உலகளாவிய கிரிக்கெட் விளையாட்டுக்கோ அல்லது பாகிஸ்தானில் உள்ள லட்சக்கணக்கானோர் உட்பட உலகெங்கிலும் உள்ள ரசிகர்களின் நலனுக்கோ உகந்ததல்ல.
திட்டமிடப்பட்ட போட்டியைத் தவிர்க்குமாறு தேசிய அணிக்கு உத்தரவிடுவது சர்வதேச விளையாட்டின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முரணானது. ஐசிசி போட்டிகள் நியாயம், நேர்மை மற்றும் போட்டி சமநிலை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் அமைந்தவை. ஒரு அணியுடனான போட்டியில் மட்டும் விளையாட மாட்டேன் என்பது அந்தக் கொள்கைகளை பலவீனப்படுத்தி, தொடரின் நம்பகத்தன்மையை சேதப்படுத்தும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து முறையான தகவலுக்காக இன்னும் காத்திருக்கிறோம். நீண்ட கால விளைவுகளை கவனமாக மதிப்பிட்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவுகளை எடுக்க வேண்டும். டி20 உலகக் கோப்பை 2026 தொடரை வெற்றிகரமாக நடத்துவதே ஐசிசி-யின் முதன்மை நோக்கம்.
இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உட்பட அனைத்து உறுப்பு வாரியங்களின் கூட்டுப் பொறுப்பாகவும் இருக்க வேண்டும். அனைத்து பங்குதாரர்களின் நலன்களையும் பாதுகாக்கும் ஒரு பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை பாகிஸ்தான் கிரிக்கெட்வாரியம் ஆராய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் அணி
தனது மற்ற லீக் ஆட்டங்களில் பிப்ரவரி 7-ம் தேதி நெதர்லாந்துடனும், 10-ம் தேதி அமெரிக்காவுடனும், 18-ம் தேதி நமீபியாவுடனும் மோது கிறது. இந்த 3 ஆட்டங்களும் இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள எஸ் எஸ்சி மைதானத்தில் நடைபெறுகிறது.
ரூ.2,200 கோடி இழப்பு
ஐசிசி தொடர்களில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி சுமார் ரூ.2,200 கோடிக்கும் மேல் வருவாயை ஈட்டிக்கொடுக்கும் என சில மதிப்பீடுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே அனைத்து ஐசிசி தொடர்களிலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகளை ஒரே பிரிவில் இணைத்து போட்டி அட்டவணை வெளியிடப்படுகிறது.
அதிக வருவாய் ஈட்டித் தரும் இந்தப் போட்டி வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையில் இல்லாதது, ஒட்டுமொத்த போட்டியுடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் பெரும் இழப்புகளை ஏற்படுத்தும் என்பது உறுதியாகி உள்ளது.
இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தை புறக்கணிக்கும் முடிவில் பாகிஸ்தான் அணி உறுதியாக இருந்தால், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கோடிக்கணக்கான வருவாயை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும். தற்போது அந்த வாரியத்தின் ஆண்டு வருமானம் சுமார் ரூ.350 கோடியாக உள்ளது. பாகிஸ்தானின் விடாப்பிடியான இந்த முடிவு ஐசிசி-யின் நிதிநிலைக்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தும்.
மேலும் ஐசிசி-யுடன் 3 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை மறுபேச்சுவார்த்தை வாயிலாக நடத்த முயற்சிக்கும் இந்திய ஊடக உரிமையாளரான ஜியோஸ்டாருக்கும் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியின் போது 10 வினாடி விளம்பரத்துக்கு ரூ.40 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த வகையில் மட்டும் போட்டியை ஒளிபரப்பு செய்யும் நிறுவனம் ரூ.200 கோடி முதல் ரூ.250 கோடி ரூபாய் வரை விளம்பர வருவாய் இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம்.
இலங்கை புறப்பட்டது பாகிஸ்தான்
ஐசிசி டி 20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக பிப்ரவரி 15-ம் தேதி நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. எனினும் இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து ஐசிசி-க்கு முறைப்படி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் டி 20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி நேற்று லாகூரில் இருந்து இலங்கை புறப்பட்டுச் சென்றது. பாகிஸ்தான் வீரர்கள் டி 20 உலகக் கோப்பை தொடருக்கான புதிய சீருடையுடன் ஓட்டல் அறையில் இருந்து புறப்படும் வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணித்தால் அந்த ஆட்டத்தில் இந்திய அணிக்கு முழுமையாக 2 புள்ளிகள் வழங்கப்படும். இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அணி மீது நிதி ஆதாரங்கள் தொடர்பான தடைகளை விதிக்கும் அதிகாரம் ஐசிசி-யிடம் உள்ளது.
பாகிஸ்தான் போட்டியை புறக்கணிப்பதாக கூறியிருந்தாலும் போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ள நாளில் இந்திய அணியின் கேப்டன் டாஸ் போடுவதற்கு களத்துக்குச் செல்ல வேண்டும். இதற்காக இந்திய அணி, இலங்கைக்கு பயணிக்கும். அங்கு டாஸ் நிகழ்வில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்பார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா டாஸ் நிகழ்வுக்கு வரவில்லை என்றால் அந்த அணி வெளியேறியதாக முடிவு செய்து, நடுவர்கள் இந்தியாவுக்கு 2 புள்ளிகளை முழுமையாக வழங்குவார்.
எதுவும் செய்ய முடியாது
பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா கூறும்போது, “டி 20 உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்கள் இலங்கை செல்கிறோம். இந்தியாவுக்கு எதிராக விளையாட வேண்டாம் என்ற முடிவு எங்களுடையது அல்ல. எங்களால் இதில் எதுவும் செய்ய முடியாது. எங்கள் அரசாங்கம் அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எங்களை என்ன செய்யச் சொல்கிறார்களோ, அதை மட்டுமே நாங்கள் செய்வோம்” என்றார்.
என்ன தண்டனை?
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதனால் அந்த அணிக்கு ஐசிசி கடுமையான தண்டனைகளை வழங்கக்கூடும் என கருதப்படுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளைக் குறைப்பது, ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் இல்லாமல் செய்வது, முன்னணி நாடுகள் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்துவது, பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பிஎஸ்எல்) வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதற்கான தடையில்லா சான்றிதழ்கள் வழங்குவதை நிறுத்துவது உள்ளிட்ட தடைகளும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு விதிக்கப்படலாம்.
நாக் அவுட் சுற்று?
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக 15-ம் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி விளையாடாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், உலகக் கோப்பை தொடரின் நாக்-அவுட் சுற்றுகளில் பாகிஸ்தான் – இந்தியா அணிகள் மோத நேர்ந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ அல்லது அந்நாட்டு அரசோ இதுவரை தெளிவுபடுத்தவில்லை.



