கமல் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படம் ‘அமரன்’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தினை தயாரிக்க ராஜ்கமல் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனை ‘தாய் கிழவி’ படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ளார்.
பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகவுள்ள படம் ‘தாய் கிழவி’. இதன் டீஸர், ராதிகாவின் லுக், காட்சியமைப்புகள் உள்ளிட்ட அனைத்துமே பெரும் எதிர்பார்ப்பினை உருவாக்கி இருக்கிறது. இப்படத்தினை சிவகார்த்திகேயன், பேஷன் ஸ்டூடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தினைத் தொடர்ந்து சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன்.
தற்போது ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் மற்றும் வெங்கட்பிரபு ஆகியோரது படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படங்களைத் தொடர்ந்து சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். விரைவில் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் இப்படம் ஒப்பந்தம் செய்யப்படும் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



