Home மாநில செய்திகள் பேருந்​துகளில் டிஜிட்டல் பரிவர்த்​தனையை ஊக்கு​விக்க சிங்கார சென்னை பயண அட்டை திட்டம் அறிமுகம்

பேருந்​துகளில் டிஜிட்டல் பரிவர்த்​தனையை ஊக்கு​விக்க சிங்கார சென்னை பயண அட்டை திட்டம் அறிமுகம்

0

பேருந்துகளில் பணமில்லா (டிஜிட்டல்) பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாக, சிங்கார சென்னை பயண அட்டை திட்டத்தை போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகப்படுத்தினார்.

சிங்கார சென்னை பயண அட்டையை பேருந்து, மெட்ரோ ரயில்கள், மெட்ரோ அமைப்புகள் உள்ளிட்ட பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தலாம். ஏற்கெனவே, மெட்ரோ ரயில் பயணத்துக்கு பயன்படுத்தும் வகையில், சிங்கார சென்னை ஸ்மார்ட் அட்டை 2023-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது, மாநகர பேருந்துகளிலும் இந்த அட்டையைப் பயன்படுத்தி பொதுமக்கள் பயணிக்கலாம்.

இந்த அட்டையை சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக மத்திய பணிமனையில், போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நேற்று அறிமுகப்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து, மாநகர போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: இத்திட்டத்தின் முதல்கட்டமாக, 50 ஆயிரம் அட்டைகள் எஸ்பிஐ மூலம் கட்டணமின்றி வழங்கப்படும். இந்த அட்டைகள் கோயம்பேடு, பாரிமுனை, சென்ட்ரல் ரயில் நிலையம், தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர், செங்குன்றம், வேளச்சேரி, கிண்டி, ஆவடி, தியாகராயநகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் ஓடி, அடையாறு, அய்யப்பன்தாங்கல், கிளாம்பாக்கம், வடபழனி, பெரம்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்களில் கட்டணமின்றி வழங்கப்படும். இந்த அட்டைகளை ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆன்லைன் போர்ட்டல்கள், கைபேசி செயலி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநகர் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்கள் போன்ற பல்வேறு வழிகளில் இந்த அட்டையை எளிதாக ரீசார்ஜ் செய்யலாம். மேலும், இந்த அட்டையை பேருந்துகளில் நடந்துநர்களிடம் ரீசார்ஜ் செய்யவும் விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version