சட்டப்பேரவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர், அமைச்சர்கள் நிர்மல்குமார், விஸ்வநாதன் ஆகியோர் ஆளுநரை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டி லோக்பவனில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை, சட்டப் பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் நேற்று சந்தித்தார். அவருடன் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், சட்டத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது ஆளுநர் உரைக்கு முறைப்படி பேரவைத் தலைவர் பிரபாகர் நன்றி கூறினார். அப்போது எம்எல்ஏக்கள் தொடர் ராஜினாமா குறித்து ஆளுநர் கேட்டறிந்ததாகவும் தெரிகிறது.
மேலும், விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்த தகவல்களையும் ஆளுநரிடம், பேரவைத் தலைவர் தெரிவித்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் நிலவும் சிக்கல்களை களைவது குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது அரசுப் பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதல்வரே இருக்க வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டைமீண்டும் வலியுறுத்தி அமைச்சர்கள் நிர்மல் குமார், விஸ்வநாதன் ஆகியோர் ஆளுநரிடம் மனு வழங்கினர்.
மாநில நிர்வாக அதிகாரத்தை வலுப்படுத்தவும், உயர் கல்வி நிறுவனங்கள் செயல்பாடுகளில் தமிழக அரசின் பங்களிப்பை அதிகரிக்கவும் இந்த சட்டத் திருத்தம் அவசியம் என்று அதில் விளக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த திமுக ஆட்சியில், அரசுப் பல்கலைக் கழக வேந்தர் பதவியை ஆளுநரிடம் இருந்து முதல்வருக்கு மாற்றும் நோக்கில் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அதன் பின்னர் அது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு ஒப்புதல் கிடைக்காததால் அந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அரசியல் சூழலில் ஆளுநரை பேரவைத்தலை வர் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
