வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால், சென்னையில் உள்ள பல்வேறு கேட்டரிங் நிறுவனங்கள் மீண்டும் விறகு அடுப்புக்கே மாறியுள்ளன.
போர் காரணமாக வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதால், சென்னை முழுவதும் உள்ள உணவு தயாரிப்பு மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.
சென்னையில் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர்கள் வழக்கம்போல் விநியோகம் செய்யப்பட்டு வந்தாலும், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதன் காரணமாக, பல ஆண்டுகள் கழித்து மீண்டும் விறகு அடுப்பைப் பயன்படுத்தி சமைக்கும் நிலைக்கு உணவு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே திருமணங்கள், காதுகுத்து உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு ஆர்டர்களைப் பெற்றுவிட்டதால், வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கக் கூடாது என்பதற்காக மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கேட்டரிங் தொழில் செய்வோர், சிலிண்டருக்கு பதிலாக வேறு வழியின்றி, கிடங்குகளில் பல ஆண்டுகளாக தூக்கிப் போடப்பட்டிருந்த பழைய விறகு அடுப்புகளை தூசி தட்டி எடுத்து வந்து, தற்போதைய சமையல் தேவைக்கு பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
இதனால் நேர விரயம் மட்டுமின்றி, சுகாதார ரீதியான சவால்களையும் இவர்கள் சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து சமையல் கலைஞர் ஒருவர் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளாக காஸ் அடுப்புகளுக்கு முழுமையாக மாறிவிட்டோம்.
தற்போது சிலிண்டர் தட்டுப்பாட்டால் மீண்டும் விறகு அடுப்புக்கு திரும்பியிருப்பது பல சவால்களை ஏற்படுத்துகிறது. காஸ் அடுப்பில் ஒரு மணி நேரத்தில் செய்யக்கூடிய வேலையை, விறகு அடுப்பில் செய்ய கூடுதல் நேரம் ஆகிறது.
தற்போதைய இளம் தலைமுறை சமையல் கலைஞர்களுக்கு விறகு அடுப்பில் சமைக்கும் பழக்கம் இல்லாததால், தீயின் வேகத்தைக் கட்டுப்படுத்தி சமைப்பது கடினமாக உள்ளது” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே வீடுகளுக்கான சமையல் காஸ் சிலிண்டர் பதிவு செய்து ஒரு வாரமாகியும் சிலிண்டர் டெலிவரி ஆகாததால், பெரும்பாலான குடும்பத்தினர் மின்சார அடுப்புகளுக்கு மாற தொடங்கியுள்ளனர்.
இதனால் சென்னையில் மின்சார அடுப்புகளின் விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. அதேபோல் ‘டர்போ’ விறகு அடுப்புகளுக்கும் மவுசு கூடியுள்ளது.
இதுதவிர சென்னையில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் இட்லி, தோசை, ஆம்லெட் போன்றவை கிடைக்காது என அறிவிப்புப் பலகைகளை வைக்கத் தொடங்கிவிட்டனர்.














