ஒளி சினிமாவின் ஆன்மா எனில், நிழல் அதன் நிசப்தமான குரல். அது வெறும் இருளல்ல. ஒரு காட்சியின் உணர்ச்சி, மனநிலை, தத்துவம், கூடவே கதையின் மறைமுகமான அடுக்குகளையும் வெளிப்படுத்தும் சக்தி கொண்டது. ஒளி கண்களுக்குத் தெரியலாம், ஆனால் நிழல் நேராக மனதுடன் பேசுகிறது. சினிமா வரலாற்றில் பல ஒளிப்பதிவாளர்கள் நிழலைப் பயன்படுத்தி காட்சிகளை மட்டும் அழகுபடுத்தாமல், கதையின் உள் உலகையும் செதுக்கியுள்ளனர்.
கே.எஸ். பிரசாத் – மர்மத்தைச் செதுக்கிய நிழல்கள்: ஆரம்பகால வண்ணப்படங்களில் ஒன்றான ‘புதிய பறவை’யில் கே.எஸ். பிரசாத், நிழலின் சக்தியை அசாதாரணமான அளவுக்குக் கொண்டு சென்றார். நீண்ட நிழல்களால் மர்மத்தைச் செதுக்கி, வண்ணப்படங்களின் ஆரம்ப காலத்தில் கடினமான வண்ண அடுக்குகளை உருவாக்கினார். ஒளி மற்றும் நிழலின் நுண்ணிய சமநிலையால் அவர் அமைத்த காட்சிகள் இன்றுவரை ஒரு பாடமாக நிற்கின்றன.
பி.எஸ்.நிவாஸ் – கனவின் நிழலில் பயம்: ‘சிகப்பு ரோஜாக்கள்’ போன்ற படங்களில் பி.எஸ். நிவாஸ், நிழலை வெறும் இருளாக அல்லாமல் கனவாகப் பயன்படுத்தினார். மென்மையான, மாயம் கலந்த நிழல்கள், காட்சிகளில் ஓர் உள் மன உளைச்சலை உருவாக்கின. அந்த கனவூட்டும் வெளிச்ச நிழல் கலவையே அந்தக் கதையின் மனவியல் பயத்தைப் பேசச் செய்தது.
அசோக் குமார் – நகர வாழ்க்கையின் நிழல்: தேசிய விருது பெற்ற ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தில் அசோக் குமார் பயன்படுத்திய மிதமான நிழல்கள், நகர வாழ்க்கையின் நடுத்தர மக்களின் உணர்ச்சிகளை மெல்லிய ஓவியமாக வரைந்தன. அவர் நிழலை ஒரு கதாபாத்திரமாகவே வடிவமைத்து, உறவுகளின் வெப்பத்தையும் தூரத்தையும் ஒரே நேரத்தில் உணர்த்தினார்.
ஹெச்.எம்.ராமச்சந்திரா – இயற்கையின் மனநிலை: தேசிய விருதைப் பெற்ற கன்னட திரைப்படமான ‘த்வீபா’வில்(Dweepa) ஒளிப்பதிவாளர் ராமச்சந்திரா, நிழலை வெறும் காட்சியமைப்பாக அல்லாமல், சூழலியல் மாற்றமும் மனித மனதின் தனிமையும் பிரதிபலிக்கும் கருவியாக மாற்றினார்.
தீவு வெள்ளத்தில் தனிமைப்படும் கதாபாத்திரங்களின் உள்ளார்ந்த போராட்டங்களையும், இயற்கையின் பரிமாற்றங்களையும் அவர் நிழல்களின் வழியே காட்சிப்படுத்தினார். மேகமூட்டமான வானமும் மழைத் துளிகளும் மாறும் ஒளி நிலைகளும் இணைந்த அந்த நிழல்கள், மனிதர்கள் சுற்றுப் புறத்துடன் கொண்ட உறவின் மாறுபாட்டையும், அவர்களின் மன உளைச்சலையும் ஆழமாக வெளிப்படுத்தின. இங்கு நிழல் ஒரு மனநிலையும், ஒரு காலநிலைப் பதிவும் ஆகிறது.
பினோத் பிரதான் – இருளின் கவிதை: ‘பரிண்டா’ (1989) என்ற இந்திப் படத்தில் பினோத் பிரதான் நிழலைப் பயன்படுத்திய விதம் இந்திய நகர சினிமாவின் புதிய அத்தியாயமாக மாறியது. மும்பையின் இருண்ட தெருக்கள், குற்ற உலகின் அச்சம், சகோதரர்களின் உள்ளகப் போராட்டம் — இவை அனைத்தும் நிழல்களின் வழியே உயிர்பெற்றன. சில நேரங்களில் நிழல்கள் கதாபாத்திரங்களை விடப் பெரிதாகப் பேசின. அந்த ஒளி-நிழல் அமைப்பே நகரத்தின் உயிரும் மனித மனத்தின் இருளும் ஒன்றாகக் கலந்த காட்சியியல் கவிதையாக அமைந்தன.
நிழல் நாடக பாரம்பரியம் – மறைமுக வேர்கள்: நிழலைக் கதை சொல்லும் மொழியாகப் பயன்படுத்தும் கலையின் வேர்கள் நம்முடைய பாரம்பரியத்திலேயே இருக்கின்றன. தொன்மையான ‘தோற்பாவைக் கூத்தி’ல் வெறும் ஒளியையும் நிழலையும்
மட்டுமே கொண்டு கதைகள் சொல்லப்பட்டன.
மனித வடிவம் காணாத அந்த நிழல்கள் தான் உணர்ச்சிகளையும் சம்பவங்களையும் உருவாக்கின. சினிமா ஒளிப்பதிவில் நிழலின் பயன்பாடு, இந்த பாரம்பரியக் கலையின் மறைமுகத் தாக்கத்தையும்
கொண்டிருக்கிறது. இருளும் ஒளியும் சேர்ந்து கதை சொல்லும் பழமையான தமிழின் கலைமொழி, திரையில் புது வடிவம் பெறுகிறது.
நிழல் – இருளின் பின்னால் ஒளி: ஒளி இல்லாமல் காட்சி இல்லை என்பதுபோல, நிழல் இல்லாமல் உணர்ச்சிகள் இல்லை. ஒவ்வொரு ஒளிப்பதிவாளரும் தங்கள் கதை சொல்லும் பாணிக்கேற்ப நிழலை வடிவமைக்கிறார்கள். சிலர் மர்மமாகவும், சிலர் நிதானமான நிஜமாகவும், சில நேரம் அது ஒரு மனிதனின் பயமாக, சில நேரம் அவனுடைய காதலாக மாறுகிறது. திரையில் ஒளி கண்களுக்குத் தெரியும். ஆனால் நிழல், மனதில் பதிகிறது.