இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடர் ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய மகளிர் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா மோசமான பார்ம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.
20 வயதான ஷபாலி வர்மா கடைசியாக விளையாடிய 6 ஆட்டங்களில் 108 ரன்களே சேர்த்திருந்தார். கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷபாலி வர்மா 77 ரன்கள் சேர்த்திருந்தார். அதன் பின்னர் அவர், மேற்கொண்டு ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை. இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் டிசம்பர் 5-ம் தேதி பிரிஸ்பனில் நடைபெறுகிறது. 2-வது போட்டியும் அங்கேயே நடத்தப்படுகிறது. கடைசி மற்றும் 3-வது போட்டி டிசம்பர் 11-ம் தேதி பெர்த் நகரில் நடைபெறுகிறது.
இந்திய அணி விவரம்: ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரியா பூனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி ஷர்மா, மின்னு மணி, பிரியா மிஸ்ரா, ராதா யாதவ், டைட்டாஸ் சாது, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், சைமா தாகூர்.