மதுரையில் கல்வியியல் கல்லூரி பெண் முதல்வருக்கு பாலியல் தொல்லை அளித்த கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டும், இன்னும் அவரைக் கைது செய்யாதது ஏன்? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பெண் பேராசிரியர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மதுரையில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறேன். எங்கள் கல்லூரி தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்டது. கல்வியியல் பல்கலை. பதிவாளராக ராமகிருஷ்ணன் பொறுப்பேற்றார். அவரை வாழ்த்துவதற்காக சென்னை சென்றபோது புகைப்படம் எடுத்துக் கொண்டோம். 2 நாட்கள் கழித்து என்னிடம் பேசிய பதிவாளர், தன்னுடன் நெருங்கி பழகினால் சிண்டிகேட்டில் பதவி பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.
பாலியல் தொல்லை: மேலும் சென்னைக்கு தனியாக வாருங்கள், சொகுசு விடுதியில் அறை எடுத்து தருகிறேன் என்றும் கூறினார். தொடர்ச்சியாக எனது புகைப்படத்தை மார்ஃபிங் செய்தும், அலைபேசி மூலமாகவும் பாலியல் தொல்லைகொடுத்து வந்தார். இது தொடர்பாக உயர் கல்வித்துறை செயலரிடமும், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தேன். பின்னர் அவர் பதிவாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸார் செப்டம்பர் மாதம் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும் ராமகிருஷ்ணனைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. அவரது முன்ஜாமீன் மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன் பிறகும் அவரை போலீஸார் கைது செய்யவில்லை. இந்த வழக்கை திருமங்கலம் மகளிர் போலீஸார் விசாரித்தால் எனக்கு நீதி கிடைக்காது. எனவே, வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, “வழக்குப்பதிவு செய்து பல மாதங்கள் ஆகிறது. குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஆனால் இதுவரை அவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?” எனக் கேள்வி எழுப்பினார்.
டிச.20-க்கு தள்ளிவைப்பு: அதைத் தொடர்ந்து, “ஒரு கல்லூரியின் பெண் முதல்வருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன?” எனக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச.20-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.














