தமிழகம் முழுவதும் மணல் தட்டுப்பாடு நிலவுவதால் ரூ.400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சதர்ன் லாரி உரிமையாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ஆர்.முனிரத்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரிகள் கடந்த 12 மாதங்களாக இயங்கவில்லை. மணல் கிடைக்காத காரணத்தால் எம்சாண்ட், ப்ளு மெட்டல் கடுமையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமான நிறுவனங்களுக்கும், மணல் லாரி உரிமையாளர்களுக்கும் ரூ.400 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதே நேரம், அண்டை மாநிலங்களில் லாரி உரிமையாளர்களுக்கு நேரடியாக மணல் தருகிறார்கள். கடந்த ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆன்லைன் மணல் விற்பனை தோல்வி அடைந்த காரணத்தால் மணல் லாரிகளுக்கு குவாரிகளில் இருந்து நேரடியாக மணல் தர வேண்டும்.
தற்போது தமிழகம் முழுவதும் அதிகளவு மழை பெய்துள்ளதால் அனைத்து ஆறுகளிலும் மணல் அதிகளவு சேமிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி போர்க்கால அடிப்படையில் புதிய மணல் குவாரிகளை இயக்கி, கட்டுமானத் தொழிலாளர்களையும், மணல் லாரி உரிமையாளர்களையும் காக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.