களத்தில் நீண்ட நேரம் நின்று பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார் ரோஹித் சர்மா என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்தார். இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் அண்மையில் முடிவடைந்தது. இதில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வென்று தொடரைக் கைப்பற்றியது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியின் மூத்த வீரரான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு பல்வேறு அழுத்தங்கள் இருந்தன. 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை போட்டி வரை ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரால் விளையாட முடியாது. இந்த ஒருநாள் தொடருடன் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அணியிலிருந்து அனுப்பப்படுவார் என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தவண்ணம் இருந்தன. ஆனால், இதுதொடர்பாக எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த ரோஹித் சர்மா தனது பேட்டால் அனைவருக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தத் தொடரில் முதல் போட்டியில் 8 ரன்களும், 2-வது போட்டியில் 73 ரன்களும், 3-வது போட்டியில் ஆட்டமிழக்காமல் 121 ரன்களும் குவித்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா. இந்தத் தொடரில் 236 பந்துகளைச் சந்தித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் யூடியூப் சானலுக்கு இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் முகமது கைஃப் அளித்த பேட்டியில் கூறியதாவது: தற்போது முடிந்துள்ள ஆஸ்திரேலிய தொடரில் அவர் மிகச் சிறப்பாக விளையாடினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரில், அபாரமாக விளையாடி ஒருநாள் போட்டிகளில் தனது திறமையை மீண்டும் நிரூபித்தார் ரோஹித். 7 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு அவர் திரும்பியுள்ள நிலையில், அவரது நிதானமான, அதே நேரத்தில் அபாரமான விளையாட்டுத் திறனை களத்தில் வெளிப்படுத்தினார்.
அவரது நிதான ஆட்டம், கேப்டன் பதவியைப் பற்றியது என்று நான் நினைக்கிறேன். இப்போது அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடுகிறார். தற்போது அவர் அணியின் கேப்டன் கிடையாது. அந்த அழுத்தம் அவருக்குக் குறைந்துள்ளது. முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து முன்னால் இருந்து வழிநடத்தும் முன்மாதிரியை அமைப்பதன் மூலம் அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதில்லை. இந்தத் தொடரில் அவர் நிறைய பந்துகளை எதிர்கொண்டு விளையாடியுள்ளார்.
தான் எடுக்கும் ரன்களின் எண்ணிக்கையை வைத்து மக்கள் அவரை மதிப்பிடுவார்கள் என்பது ரோஹித் சர்மாவுக்குத் தெரியும். தற்போது அவர் 20 பந்துகளில் 40 ரன்கள் எடுக்கும் அதிரடியான விளையாட்டை விளையாட மாட்டார் என்று எண்ணுகிறேன். களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட அவர் விழைகிறார். இதற்காக அவர் பெரிய இன்னிங்ஸ்களை விளையாட வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்.
களத்தில் அவர் நீண்ட நேரம் நின்று பெரிய ஸ்கோரை எடுக்க விரும்புகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. போட்டியின்போது அவர் குறைவான ரிஸ்க்குகளை எடுத்து தனது இன்னிங்ஸை ஆழமாக எடுத்துச் செல்ல விரும்புகிறார். முந்தைய சில ஆட்டங்களில் நடந்ததைப் போல தனது விக்கெட்டை எளிதில் இழக்க மாட்டார் என்பது இப்போது தெளிவாகியுள்ளது.இவ்வாறு கைஃப் தெரிவித்தார்.














