கர்நாடக மாநிலம் மங்களூருவில் மங்களூரு சேலஞ்ச் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 60-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ரித்விக் சஞ்ஜீவி, சகநாட்டைச் சேர்ந்த ரூனக் சவுகானுடன் மோதினார். இதில் ரித்விக் 14-21, 21-19, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த ரித்விக் சஞ்ஜீவி ஹட்சன் பாட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
தென் ஆப்பிரிக்க அணி 263 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
பைசலாபாத்: தென் ஆப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பைசலாபாத் நகரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 49.1 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக குயிண்டன் டி காக் 71 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 63 ரன்களும், லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ் 60 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் நசீம் ஷா, அப்ரார் அகமது ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், சைம் அயூப் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதையடுத்து 264 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் பேட் செய்யத் தொடங்கியது.
டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர்: அரை இறுதியில் ரைபகினா
சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள டென்னிஸ் வீராங்கனைகள் கலந்து கொண்டு இரு பிரிவுகளாக ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்றனர். செரீனா வில்லியம்ஸ் குரூப்பில் இடம் பெற்றுள்ள 6-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா தனது 2-வது ஆட்டத்தில் நேற்று போலந்தின் இகா ஸ்வியாடெக்குடன் மோதினார். இதில் ரைபகினா 3-6, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். டபிள்யூடிஏ பைனல்ஸ் தொடரில் ரைபகினா அரை இறுதியில் கால்பதிப்பது இதுவே முதன்முறையாகும்.














