நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். விக்கி கவுஷலுடன் அவர் நடித்து பிப்.14-ல் வெளியான ‘ஜாவா’ திரைப்படம் ரூ.500 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுடன் ‘சிக்கந்தர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவி கனிகா சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க ராஷ்மிகா மந்தனாவுக்குப் பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் நேரமில்லை என்று கூறி மறுத்துவிட்டார். அவருக்குப் பாடம் புகட்ட வேண்டாமா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். அவரின் இந்தப் பேச்சுக்கு ராஷ்மிகா சார்ந்துள்ள கொடவா சமூகத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, கொடவா தேசிய கவுன்சில் தலைவர் நந்திநேர்வந்த நாச்சப்பா, மத்திய மற்றும் கர்நாடக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ராஷ்மிகாவுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது சமூக பின்னணி காரணமாகவே ராஷ்மிகா குறிவைத்துத் தாக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டுள்ள அவர், தேவையற்ற அரசியல் விவாதங்களுக்குள் ராஷ்மிகாவை இழுத்து, மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.














