பதிவுத்துறை வருவாய் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாதம் வரை ரூ.1,222 கோடி அதிகரித்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், பத்திர பதிவுக்காக சுபமுகூர்த்த தினங்களான நவ.14, 15 தேதிகளில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இந்தாண்டு அக்டோபர் மாதத்துக்கான அனைத்து துணை பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் , மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனித்துணை ஆட்சியர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம், அமைச்சர் பி.மூர்த்தி தலைமயைில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பேசியதாவது:
பதிவுத் துறையில் கடந்த 2023-24-ம் நிதியாண்டின் முதல் 7 மாதங்கள் அதாவது அக்டோபர் வரை ரூ.10,511 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. நிகழும் 2024-25-ம் நிதியாண்டில் அக்டோபர் வரை ரூ.11,733 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த நிதியாண்டின் வருவாயுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் கூடுதலாக ரூ.1,222 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
ஐப்பசி மாதத்தின் சுபமுகூர்த்த தினங்களான வரும் நவ.14 மற்றும் 15 ஆகிய தினங்களில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படவுள்ளது. மேலும் அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களும், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், களப்பணி செய்ய வேண்டிய ஆவணங்கள் தவிர்த்து மற்ற பதிவு செய்த ஆவணங்களை அதேநாளிலே திருப்பி ஒப்படைத்தல், ஆவணங்கள் பதிவு செய்தவுடன் தன்னிச்சையாக இணையவழி பட்டா மாற்றம் செய்வதை தேர்வு செய்தல், வில்லங்கச்சான்று மற்றும் சான்றிடப்பட்ட நகல்கள் இணையவழியில் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அவர்களின் உள்நுழைவுக்கே இணையதளம் வழி அனுப்பிவைத்தல் வேண்டும். மேலும் நிலுவை ஆவணங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தற்போதைய நிலை குறித்த விவரங்கள், தணிக்கை பிரிவு அலுவலர்களின் பணிகள், முக்கிய பதிவேடுகளை பராமரித்து கண்காணித்தல் என அனைத்து பணிகளையும் தொய்வின்றி உடனுக்குடன் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், தனித்துணை ஆட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.