ஸ்ரீவில்லிபுத்தூர்: வனவிலங்குகளால் பயிர்கள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அலுவலகம் முன்பு தென்னை விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு தென்னைவிவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முத்தையா தலைமை வகித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதி கிராமங்களான சிங்கம்மாள்புரம், மம்சாபுரம், வாழைக்குளம், திருவண்ணா மலை வெங்கடேசபுரம் பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வனவிலங்குகளால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்மலையடிவாரப் பகுதியில் அகழிகளை வெட்டி பராமரிக்க வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் உடன் புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜன், டி.எஸ்.பி. ராஜா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மலையடிவாரப் பகுதியில் கூடுதல் களப் பணியாளர்களை நியமித்து கண்காணிக்கவும், யானைகள் நடமாட்டம் அதிகம்உள்ள இடங்களில் அகழிகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மலை அடிவாரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்கு உள்ள விவசாய நிலங்களில் சோலார் அதிர்வு மின்வேலி அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என துணை இயக்குநர் உறுதி அளித்தார். இதைஏற்றுக் கொண்ட விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.