குமரி மாவட்டத்தில் புதன்கிழமை விடிய விடிய பலத்த மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறிது நாள்கள் மழை பெய்யாமல் இருந்த நிலையில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதில், குறிப்பாக மாவட்டத்தில் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. குறிப்பாக மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. புதன்கிழமை பகலிலும் சாரல் மழை நீடித்தது. மாவட்டத்தில் புதன்கிழமை காலை 6 மணியுடன் கூடிய 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அடையாமடையில் 45.4 மி.மீ. மழை பதிவானது.
மழை காரணமாக திற்பரப்பு அருவியில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. ஓணம் பண்டிகை, மிலாடி நபி தின விடுமுறை காரணமாக அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனா்.
