பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி விக்கெட்டுக்கு களமிறங்கிய காகிசோ ரபாடா,
செனுரன் முத்துசாமியுடன் இணைந்து 98 ரன்கள் குவித்து அசத்தினார்.
ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 333 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 65 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 68, கைல் வெர்ரெய்ன் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து விளையாடியது. கைல் வெர்ரெய்ன் (10) மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆசிப் அப்ரிடி பந்தில் ஆட்டமிழந்தார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 76, சைமன் ஹார்மர் 2, மார்கோ யான்சன் 12, கேசவ் மகாராஜ் 30 ரன்களில் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். 306 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்த நிலையில் செனுரன் முத்துசாமியுடன் இணைந்த காகிசோ ரபாடா அதிரடியாக விளையாடினார்.
கடைசி விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்த பிறகே இந்த ஜோடியை பிரிக்க முடிந்தது. ரபாடா 61 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்த நிலையில் ஆசிப் அப்ரிடி பந்தை லாங் ஆன் திசையில் விளாச முயன்ற போது அப்துல்லா ஷபிக்கிடம் கேட்ச் ஆனது. முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 119.3 ஓவர்களில் 404 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
செனுரன் முத்துசாமி 155 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணி தரப்பில் அறிமுக வீரராக களமிறங்கிய 38 வயதான ஆசிப் அப்ரிடி 6 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன் மூலம் அறிமுக வீரராக அதிக வயதில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஆசிப் அப்ரிடி படைத்தார். இதற்கு முன்னர் 1933-ம் ஆண்டு தனது 37 வயதில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக அறிமுகமான இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் சார்லஸ் மரியோட் 5 விக்கெட்களை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
71 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 35 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது. இமாம் உல் ஹக் 9, அப்துல்லா ஷபிக் 6, ஷான் மசூத் 0, சவுத் ஷகீல் 11 ரன்களில் நடையை கட்டினர். பாபர் அஸம் 49, முகமது ரிஸ்வான் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் சைமன் ஹார்மர் 3 விக்கெட்களையும், ரபாடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். கைவசம் 6 விக்கெட்கள் இருக்க 23 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது.