புரோ கபடி லீக் 12-வது சீசனின் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதி போட்டி டெல்லியில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புரோ கபடி லீக் தொடரின் 3-வது கட்ட போட்டிகள் சென்னையில் நேற்றுடன் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து கடைசிகட்ட லீக் போட்டிகள் இன்று (11-ம் தேதி) முதல் வரும் 23-ம் தேதி வரை டெல்லியில் உள்ள தியாகராஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் பிளே ஆஃப் ஆடடங்கள் மற்றும் இறுதிப் போட்டி இதே மைதானத்தில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் நேற்று அறிவித்தனர்.
பிளே ஆஃப் சுற்று வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. இதில் லீக் சுற்றின் முடிவில் 5 முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-இன் சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். இந்த சுற்று 26 முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் எலிமினேட்டர், தகுதி சுற்று ஆட்டங்களும் அடங்கும். சாம்பியன் பட்டம் வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி 31-ம் தேதி நடைபெறுகிறது.