தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமாக உள்ளது. டெல்லியில் செயற்கை மழை பொழியச் செய்து காற்று மாசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் மாநில அரசு கடந்த வாரம் இறங்கியது. ஆனால் காற்றில் போதிய ஈரப்பதம் இல்லாததால் இந்த முயற்சி தோல்வியடைந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், “டெல்லி முழுவதும் சாம்பல் நிற துணியை போட்டு மூடியது போல் காற்று மாசு மிக மோசமாக இருந்தது. இது குறித்து நாம் அனைவரும் அரசியல் பாகுபாடின்றி ஆலோசிக்க வேண்டும். காற்று மாசுவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மோசமான சூழலை போக்க எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் ஒத்துழைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பதிவில் பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் ரேகா குப்தா, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆகியோரையும் இணைத்து, டெல்லி காற்று மாசு பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.














