சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி பாமக சார்பில் டிச.17-ம் தேதி அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெறுகிறது.
இதில் தவெக பங்கேற்க, அன்புமணி சார்பில் அழைப்பு கடிதத்தை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் ஆகியோரிடம் பாமக வழக்கறிஞர் பாலு வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி பாமக சார்பில் டிச.17-ம் தேதி சென்னையில் மாபெரும் போராட்டம் நடைபெற இருக்கிறது.
இதில் அனைத்து அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், சமூக அக்கறை கொண்ட அமைப்புகள் கலந்துகொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி கடிதம் எழுதியிருக்கிறார்.
அந்த வகையில், தவெக-வும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. தவெகவின் முதல் மாநாட்டில் இருந்தே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி வருகிறார்கள். எனவே, இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறோம் என்று கூறினார்.
ஆதவ் அர்ஜுனா கூறும்போது, “சமூகநீதி பேசும் திமுக, சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைக்கிறது. பாமக கடிதம் குறித்து கட்சித்தலைவரிடம் தெரிவிக்கப்பட்டு கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.







