மசூதிகளை ஆய்வு செய்ய குவியும் மனுக்கள்: தேசிய மாநாட்டு கட்சி கண்டனம்

0
253

மசூதிகளை ஆய்வு செய்ய ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதற்கு தேசிய மாநாட்டு கட்சியின் காஷ்மீர் மாகாண தலைவர் சவுகத் மிர் தனது கவலையையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல இடங்களில் மசூதிக்கு அடியில் கோயில் இருப்பதாகவும், அங்கு கள ஆய்வு நடத்த வேண்டும் என பலர் மனு தாக்கல் செய்து வருகின்றனர். உத்தர பிரதேசத்தின் சம்பலில் ஜாமா மசூதியில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி கள ஆய்வு நடத்த சென்றபோது கலவரம் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இது போன்ற மனுக்கள் நாடு முழுவதும் தாக்கல் செய்யப்படுவதற்கு தேசிய மாநாட்டு கட்சியின் காஷ்மீர் மாகாண தலைவர் சவுகத் மிர் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மசூதிகள் இருக்கும் இடத்தில் கள ஆய்வு செய்ய வேண்டும் என மனுக்கள் குவிவது ஆழ்ந்த கவலையளிக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், அவர்கள் நாட்டின் அமைதியை சீர்குலைப்பர். அஜ்மீரில் உள்ள காஜா மொயின் உத் தின் சிஸ்தி முஸ்லிம்களின் புனித தலமாக உள்ளது. அது ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையின் அடையாளமாக உள்ளது. அங்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர்.

அஜ்மீர் தர்காவின் பின்னணியை கருத்தில் கொள்ளாமல், அங்கு ஆய்வு நடத்தப்பட வேண்டும் என சமீபத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பழைய மசூதிகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை சிலர் இடிப்பது நாட்டில் பிரிவினையை விதைக்கும் முயற்சி.

தர்காவை முஸ்லிம் ஆட்சியாளர்கள் மட்டும் கட்டவில்லை. இந்து அரசர்கள் பலர், தர்காக்கள் கட்ட தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர். அஜ்மீரின் வரலாறு, பாரம்பரியம் தெரியாத சிலர், கவனத்தை ஈர்ப்பதற்காக தர்காவின் கீழ் கோயில் உள்ளதாக பொய் மனுக்களை தாக்கல் செய்கின்றனர். ஆதாரமற்ற இந்த மனுக்களை நீதிமன்றம் பரிசீலிப்பது வருத்தம் அளிக்கிறது. நமது நாட்டின் மதநல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிக்கு எதிராக நாங்கள் துணை நிற்போம். புனித தலங்களின் புனிதத்தையும், பாரம்பரியத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். ஆதாரமற்ற கோரிக்கைகள், பிரிவினை நடவடிக்கைகள், நமது சமூகத்தை சீர்குலைக்க அனுமதிக்க கூடாது.

1991-ம் ஆண்டு வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் படி, வழிபாட்டுத் தலங்களில் எந்த மாற்றத்தையும் சந்தேகத்திற்கு இடமின்றி தடைசெய்கிறது. 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு சுதந்திரம் பெற்றபோது, வழிபாட்டுத் தலங்கள் எப்படி இருந்ததோ, அதை அப்படியே பாதுகாக்க வேண்டும் என வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் 4-வது பிரிவு கூறுகிறது. ராம் ஜன்மபூமி வழக்கில் கூட, மத நல்லிணக்கம், நாட்டின் பன்முக பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு சவுகத் மிர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here