புதுக்கடை அருகே பார்த்திப்புரத்தில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோவில் உள்ளது. மிகப் பழமைவாய்ந்த இந்த கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை, மற்றும் வெள்ளிக் கவசங்கள் கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கோவிலில் கொள்ளையடித்த நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முஞ்சிறை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் நேற்று மாலை பார்த்திப்புரம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் செல்வநாயகம் தலைமை வகித்தார். குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த போராட்டத்திற்கு புதுக்கடை போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அனுமதியை மீறி போராட்டம் நடத்தியதாக புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் அளித்த புகாரின் பேரில் அரசு உத்தரவை மீறி, போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக 60 பெண்கள் உட்பட 230 பேர் மீது புதுக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.