Follow Us
2026 ஐசிசி டி20 உலகக்கோப்பையின் பிரதான சர்ச்சையான பாகிஸ்தான், இந்தியாவுடனான போட்டியை புறக்கணித்து பிறகு முடிவை வாபஸ் பெற்ற விவகாரத்தில் ‘வங்கதேசத்திற்கு கொஞ்சமாவது மரியாதையைப் பெற்றுத் தருவதுதான் எங்கள் நோக்கம்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நக்வி தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 1ம் தேதி பாகிஸ்தான் இந்தியாவுடன் ஆடாது என்ற முடிவை பாகிஸ்தான் அரசு அறிவித்தது. ஆனால் திரைக்குப் பின் நடைபெற்ற ஏகப்பட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் சமரசங்களுக்குப் பிறகு புறக்கணிப்பு முடிவை பாகிஸ்தான் திரும்பப் பெற்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வங்கதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே ஐசிசி வெளியிட்ட அறிக்கையில் வங்கதேசத்துக்கு எவ்வித அபராதமோ தடைகளோ விதிக்கப்பட மாட்டாது என்பதையும் 2028 முதல் 2031 வரையிலான ஐசிசி நிகழ்வுகளை நடத்தும் உரிமைகளையும் வழங்கியதாக கூறியிருந்தது.
இது தொடர்பாக நக்வி கூறியதாவது: எங்கள் பேச்சுவார்த்தைகளின் போது நாங்கள் வங்கதேசத்தைத் தவிர வேறு எந்த வித நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. எங்களது ஒரே நோக்கம் வங்கதேசத்துக்கு கொஞ்சமாவது மரியாதையை மீட்டுத் தருவதே.
வங்கதேசம் என்ன விரும்பியது என்பதைப் பார்த்தீர்கள். அவர்கள் கேட்டது கிடைத்துவிட்டது, அது போதும். அவ்வளவுதான் நாங்கள் எதிர்பார்த்ததும். எங்களுக்கு இதில் தனிப்பட்ட நோக்கங்கள் எதுவும் கிடையாது. இது குறித்து யார் என்ன சொன்னாலும் கவலையில்லை, எங்கள் வேலை வங்கதேசம் தொடர்பானது மட்டுமே.
அதற்காகத்தான் பாகிஸ்தான் அரசும் அந்த முடிவை எடுத்தது. வங்கதேச வாரியத்தின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுவிட்டன. மேலும் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது ஒப்புக் கொள்ளப்பட்டது. அதன் பிறகே நாங்கள் விளையாட ஒப்புக் கொண்டோம். இவ்வாறு நக்வி கூறினார்.



