தஷ்வந்த்தின் தூக்கு தண்டனையை ரத்து செய்து விடுவிக்க உத்தரவு – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன?

0
28

சென்னையில் 6 வயது சிறுமி ஹாசினி எரித்​துக் கொல்​லப்​பட்ட வழக்​கில் குற்​ற​வாளி தஷ்வந்​துக்கு விதிக்​கப்​பட்ட தூக்கு தண்​டனையை ரத்து செய்​தும், அவரை விடு​வித்​தும் தீர்ப்​பளித்​துள்ள உச்ச நீதி​மன்​றம் இந்த வழக்​கில் அரசு தரப்பு குற்​றச்​சாட்டை சந்​தேகத்​துக்​கிட​மின்றி நிரூபிக்க தவறி​யுள்​ள​தாக கருத்து தெரி​வித்​துள்​ளது.

சென்னை போரூரை அடுத்த மதனந்​த​புரம் பகு​தி​யைச் சேர்ந்த பாபு மற்​றும் ஸ்ரீதேவி தம்​ப​தி​யின் 6 வயது மகள் ஹாசினி. இவர் கடந்த 2017 பி்ப்​.5-ம் தேதி திடீரென மாய​மா​னார். மாங்​காடு போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், குன்​றத்​தூர் பகு​தி​யைச் சேர்ந்த சேகர் மற்​றும் சரளா தம்​ப​தி​யின் 22 வயது மகனான தஷ்வந்த், சிறுமி ஹாசினியை பாலியல் வன்​புணர்வு செய்து பின்​னர் எரி்த்துக் கொலை செய்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து தஷ்வந்த் கைது செய்​யப்​பட்டு குண்​டர் தடுப்​புச் சட்​டத்​தில் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இந்த வழக்கு விசா​ரணை செங்​கல்​பட்டு மகளிர் நீதி​மன்​றத்​தில் நடந்து வந்​தது.

இந்​நிலை​யில் தஷ்வந்த் மீதான குண்​டர் தடுப்​புச் சட்ட உத்​தரவை சென்னை உயர் நீதி​மன்​றம் கடந்த 2017 செப்​. 10 அன்று ரத்து செய்த நிலை​யில் ஜாமீனி்ல் விடுவிக்​கப்​பட்ட தஷ்வந்த் கடந்த 2017 டிச.2 அன்று அவரது தாயார் சரளாவை​யும் கொலை செய்து தப்​பி​னார். பி்ன்​னர் தனிப்​படை போலீ​ஸார் அவரை கைது செய்​தனர்.

இந்​நிலை​யில் சிறுமி ஹாசினி கொலை வழக்கை விசா​ரித்த செங்​கல்​பட்டு மாவட்ட மகளிர் நீதி​மன்ற நீதிபதி வேல்​முரு​கன், குற்​றம்​சாட்​டப்​பட்ட தஷ்வந்​துக்கு தூக்கு தண்​டனை விதித்து கடந்த 2018 பிப்​.19 அன்று தீர்ப்​பளித்​தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்​முறை​யீட்டு மனு தள்ளுபடி செய்​யப்​பட்​டது. இதையடுத்து தனக்கு விதிக்​கப்​பட்ட தூக்கு தண்​டனையை எதிர்த்து தஷ்வந்த் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த உச்ச நீதி​மன்ற நீதிபதி விக்​ரம்​நாத் தலை​மையி​லான அமர்வு பிறப்​பித்​துள்ள உத்​தர​வு: எரித்​துக் கொல்​லப்​பட்ட சிறுமி ஹாசினி, குற்​றம்​சாட்​டப்​பட்ட தஷ்வந்த் ஆகிய இரு​வரை​யும் கடைசி​யாக பார்த்​தது யார், சிசிடிவி கண்​காணிப்பு கேமரா பதி​வில் தஷ்வந்த் எங்கு செல்​கிறார், சாட்​சிகளின் ஒப்​புதல் வாக்​குமூலம், தடய​வியல் ஆய்​வறிக்கை போன்​றவற்றை ஆராய்ந்​த​தில், குற்​றச்​சாட்டை அரசு தரப்பு சந்​தேகத்​துக்​கிட​மின்றி சரிவர நிரூபிக்​கத் தவறி​யுள்​ளது. டிஎன்ஏ பரிசோதனை முடிவு​களும் பொருந்​த​வில்​லை.

போது​மான ஆதா​ரங்​கள் சமர்ப்​பிக்​கப்​பட​வில்​லை. எனவே இந்த வழக்​கில் மேல்​முறை​யீட்டு மனு​தா​ர​ரான தஷ்வந்​துக்கு விதிக்​கப்​பட்ட தூக்கு தண்​டனையை ரத்து செய்து அவரை வழக்​கில் இருந்து விடுவிக்​கிறோம். வேறு எந்த வழக்​கிலும் அவர் தேடப்​பட​வில்லை எனில், உடனடி​யாக அவரை சிறையி​லிருந்து விடுவிக்​க வேண்​டும்​. இவ்​வாறு உத்​தர​விட்​டுள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here