தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது பதவி நீக்கத் தீர்மானம்: திரிணமூல் காங்கிரஸுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு

0
25

 மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) தேர்தல் ஆணையத்தால் மேற்கு வங்கத்தில் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் இந்த எஸ்ஐஆர் பணியில் முறைகேடுகள் நடை பெற்றுள்ளதாகவும், இதற்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்தான் காரணம் என்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி புகார் கூறி வருகிறது. இதைத் தொடர்ந்து அவரை பதவியிலிருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை திரிணமூல் காங்கிரஸ், மாநிலங்களவையில் கொண்டு வரும் என்று கட்சி எம்.பி.சவுகதா ராய் நேற்று அறிவித்தார்.

எஸ்ஐஆர் பணியின் காரணமாக 59 லட்சம் உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்றும் அவர் புகார் தெரிவித்தார். இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முடிவை வரவேற்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ், எம்.பி.சுக்தேவ் பகத் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். திரிணமூல் காங்கிரஸ் கொண்டு வரும் தீர்மானத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பூர்ணியா தொகுதி சுயேச்சை எம்.பி.யான பப்பு யாதவ், சமாஜ்வாதி எம்.பி.தர்மேந்திர யாதவ் உள்ளிட்டோரும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு பாஜக மூத்த தலைவர்கள் அனுராக் தாக்குர், முக்தார் அப்பாஸ் நக்வி, மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here