எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி குறித்து இரண்டு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், கூட்டணி குறித்த தனது கருத்துகளை தொடர்ச்சியாக தெரிவித்த வண்ணம் உள்ளார்.
இந்நிலையில், கூட்டணி குறித்து யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என்றும் காங்கிரஸில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவை விட யாரேனும் பெரியவர்களா? என்று சொல்லி மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோரை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டித்தார்.
இந்தச் சூழலில் இன்று (பிப்.17) காலை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பாரதியாரின் ‘அச்சமில்லை… அச்சமில்லை… அச்சமென்பதில்லையே…’ என்பதை சுட்டும் படம் ஒன்றை மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாக உள்ள மாணிக்கம் தாகூர் பகிர்ந்துள்ளார். அது உட்கட்சி அளவில் தன்மீதான விமர்சனத்துக்கு அவர் கொடுத்துள்ள ரிப்ளை என பார்க்கப்படுகிறது.
“2021-ல் திமுக 173 தொகுதியில் போட்டியிட்டு 133 இடங்களில்தான் வெற்றி பெற்றது. நாங்கள் (காங்கிரஸ் கட்சி) கேட்பது நீங்கள் தோற்ற அந்த இடங்களைத்தான். அதிகாரப் பகிர்வு என்பது அவசியம்; ஆட்சியில் பங்கு கேட்பது எங்கள் உரிமை. அதை மக்கள் தீர்மானிப்பார்கள்” என அண்மையில் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
‘ஆட்சியில் பங்கு’, ‘அதிகாரத்தில் பங்கு’, ‘தேர்தலில் அதிக இடங்களை தங்களுக்கு ஒதுக்க வேண்டும்’ என காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் தொடர்ந்து பொதுவெளியில் பேசி வருகின்றனர். இந்த கருத்தை மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு திமுக நிர்வாகிகளும் பதில் அளித்து வருகின்றனர். இது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையிலான கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டணிப் பேச்சுவார்ததையின் நிலை என்ன? – “கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் தரப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே குழுவை அறிவித்துவிட்டோம். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டோம். ஆனால், 70+ நாட்கள் கடந்தும் திமுக தரப்பில் இன்னும் குழு அமைக்கப்படவில்லை. இருப்பினும், ஒருமித்த கருத்துடன் சுமுகமான முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம்” என்று தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கடந்த வாரம் தெரிவித்தார்.
இந்த சூழலில் பிப்.22-ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடங்கும் என திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்தது கவனிக்கத்தக்கது.













