மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ள நியூஸிலாந்து அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று அவர் கூறியுள்ளதாவது:
இந்தியாவுக்கு வருகை தரும் எந்தவொரு அணிக்கும், இங்கு டெஸ்ட் தொடரை வெல்வது என்பது ஒரு கனவாகும். அதை தற்போது நியூஸிலாந்து அணி செய்துள்ளது. இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
ஓர் அணியாக குழு முயற்சிகளால் மட்டுமே இத்தகைய முடிவுகளை அடைய முடியும். மேலும் இப்போட்டியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் சான்ட்னருக்கு எனது பாராட்டுக்கள். இந்த அபார சாதனைக்காக நியூஸிலாந்து அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். இவ்வாறு சச்சின் பதிவிட்டுள்ளார்.














