நேபாள அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: உயர் மதிப்புள்ள இந்திய கரன்சிகளை கொண்டு செல்வதற்கான ஒரு தசாப்த கால தடை, முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தற்போது தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின்படி ஒரு நபர் அதிகபட்சமாக ரூ.25,000 மதிப்புள்ள 200, 500 ரூபாய் இந்திய நோட்டுகளை வைத்திருக்க முடியும். திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
திருத்தப்பட்ட விதியின்படி, நேபாள மற்றும் இந்திய குடிமக்கள் இருவரும் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு கொண்டு வரலாம் அல்லது நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு எடுத்துச் செல்லலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேபாள ராஷ்டிர வங்கியின் (என்ஆர்பி) செய்தித் தொடர்பாளர் குரு பிரசாத் பவுடலின் கூறுகையில், “அரசின் முடிவு அரசிதழில் வெளியிடப்பட்டவுடன் என்ஆர்பி இதுதொடர்பான ஒரு சுற்றறிக்கையை வெளியிடும்.
இது, இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு அல்லது நேபாளத்திலிருந்து இந்தியாவுக்கு பயணம் செய்யும் தனிநபர்கள் உயர்மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதை சட்டப்பூர்வமாக்கும்’’ என்றார்.







