திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமியா கல்லூரி வரலாற்றுத் துறை ஆய்வு நெறியாளர் சி.முகமது ஃபஹீம் மேற்பார்வையின் கீழ் முனைவர் பட்ட ஆய்வாளர் ரங்கநாதன், ஜவ்வாது மலைக்கு உட்பட்ட நெல்லிப்பட்டு கிராமத்தில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால கற்கருவிகளை கண்டெடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: நெல்லிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், கிரீஸ்வரன் ஆகியோர் அளித்த தகவலின்படி, அங்கு ஆசிரியராகப் பணியாற்றும் கோவிந்தராஜ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோரது நிலங்களில் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் அரிய கற்கருவிகளை கண்டெடுத்துள்ளோம். இவை புதிய கற்கால மனிதர்களின் தேவைகளையும், தொழில்நுட்பத் திறன்களையும் வெளிப்படுத்துகின்றன.
இங்கு கண்டெடுக்கப்பட்ட கற்கோடாரி நீளமான, ஒருமுனை கூர்மையான, நுட்பமாக மெருகூட்டப்பட்டதாக உள்ளது. காடுகளை அழித்து விவசாய நிலங்களை உருவாக்குவதற்கும், மரங்களை வெட்டி வீடுகளை உருவாக்குவதற்கும் இவை பயன்பட்டிருக்கும். இங்கு அதிக எண்ணிக்கையில் கற்கோடாரிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், இவை அன்றாடப் பயன்பாட்டுக் கருவிகளாக மட்டுமின்றி, வர்த்தகத்தின் ஒரு பகுதியாகவும் இருந்திருக்கலாம் என்று தெரிகிறது.
கற்கோடாரிகளின் ஒரே மாதிரியான வடிவமைப்பு மற்றும் நுட்பமான மெருகூட்டல் ஆகியவை, ஜவ்வாது மலைப்பகுதியின் புதிய கற்கால மனிதர்களின் தேவையை மட்டுமின்றி, தரமான கைவினைத் திறன் மற்றும் சமூக கட்டமைப்பை வெளிப்படுத்துகின்றன. இந்தப் பகுதி ஒரு காலத்தில் தன்னாட்சி பெற்ற, விவசாயம் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த நாகரிக மையமாக இருந்திருக்கும். ஜவ்வாது மலையின் வரலாற்றில் இது திருப்புமுனைக் கண்டுபிடிப்பாகும்.
இவற்றின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, தொல்லியல் துறையினர் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, இந்தக் கருவிகளை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம், இவற்றின் மூலப் பொருட்களையும், தமிழகத்தின் மற்ற புதிய கற்காலக் குடியேற்றங்களுடன் கொண்டிருந்த வர்த்தக உறவுகளையும் அறியலாம். இவ்வாறு அவர் கூறினார்.














