அடையாறு சீரமைப்பு பணிக்கான அரசின் மறுகுடியமர்வு திட்டத்துக்கு ஆக்கிரமிப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அடையாறு நதியை சீரமைக்க ரூ.1500 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும் அதன் மூலம் மாசுபடுவதை தடுக்கவும் கரையோரம் உள்ள குடியிருப்புகளை மறுகுடியமர்வு செய்வது அவசியமாகும்.
இதன் ஒரு பகுதியாக அனகாபுத்துரில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், எம்ஜிஆர் நகர் 3-வது தெரு ஆகிய இடங்களில் வசித்து வரும் 593 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் தைலாவரம், கீரப்பாக்கம், பெரும்பாக்கம் மற்றும் நாவலுர் ஆகிய இடங்களில் 390 சதுர அடியில் (தலா ரூ.17 லட்சம்) இலவசமாக வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட உள்ளன.
மேலும், அடையாறு ஆற்றங்கரையில் உள்ள ஜோதி ராமலிங்கம் நகர், திடீர் நகர், ஜோதி அம்மாள் நகர், சூர்யா நகர், மல்லிகைப்பூ நகர்ஆகிய 5 இடங்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு 390 சதுர அடி பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக சுமார் ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான வீடுகள் கட்டப்பட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளன.
மேலும், பயனாளிகளுக்கு குடும்பம் ஒன்றுக்கு இடமாற்றுப்படியாக ஒருமுறை ரூ. 5000, வாழ்வாதார உதவிக்காக மாதம் ரூ.2500 என்ற அடிப்படையில் ஒரு ஆண்டுக்கு ரூ.30000, மின்சார இணைப்பு கட்டணம் ரூ.2500 என்ற அடிப்படையிலும் ஒவ்வொரு குடியமர்வுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக விரிவான சமுதாய வளர்ச்சி திட்டங்கள், உடனடி குடும்ப அட்டை மாற்றம் செய்தல், விதவை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடி சமூக பாதுகாப்பு திட்ட உதவி மாற்றம் செய்தல், கல்வி, அங்கன்வாடி, தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலை பள்ளி சேர்க்கை போன்ற அனைத்து திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, உரிய உதவிகளுடன் செய்யப்படும் அரசின் மறு குடியமர்வுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.