நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுதொடர்பாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் நேற்று கூறியதாவது: மும்பையில் புதிய சாலைகள், மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது மும்பை பெருநகர போக்குவரத்தின் சராசரி வேகம் ஒரு மணிக்கு 20 கி.மீ. ஆக இருக்கிறது.
காலை, மாலை நேரங்களில் 15 கி.மீ. ஆக இருக்கிறது. மும்பையின் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காண சுரங்கப் பாதைகளை அமைக்க திட்டமிட்டு உள்ளோம். அதாவது போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளுக்கு அடியில் புதிதாக சுரங்கப் பாதைகள் அமைக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் மும்பையின் பல்வேறு பகுதிகளில் சுரங்கப் பாதைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
மும்பை புறநகர் ரயில்களில் தினமும் 90 லட்சம் பேர் பயணம் மேற்கொள்கின்றனர். புறநகர் ரயில் சேவையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மும்பை மெட்ரோ ரயில்களை போன்று அனைத்து புறநகர் மின்சார ரயில்களிலும் ஏசி வசதி செய்யப்படும். இதற்காக ஒரு பைசாகூட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. இவ்வாறு முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்தார்.









