உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் உள்ளிட்ட பல முக்கியமானக் கோயில்கள் உள்ளன. இவற்றில் பல்வேறு பிரிவுகளின் துறவிகளுக்கான மடங்கள், தர்ம சத்திரங்களும் உள்ளன. இவை அனைத்துக்கும் வாராணசி மாநகராட்சி வரி வசூலிக்கிறது.
வரி பாக்கி தொடர்பாக மாநகராட்சி கால அவகாசத்துடன் நோட்டீஸ் அளித்திருந்தது. வரி செலுத்தாதவர்களுக்கு ஜப்தி அறிவிப்பும் ஒரிரு நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது.இதற்கு துறவிகளும், மடங்களின் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வாராணசி பாதாளபுரி மடத்தின் தலைவர் ஜகத்குரு பாலக தேவாச்சார்யா கூறுகையில், ‘‘எங்கள் மடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிமான வரி நிலுவை இருப்பதாக கூறி ஜப்தி அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.
சித்தா பீடம் ஜாகேஷ்வர் மகாதேவ் கோயில் மடத்துக்கும் ரூ.65,000-க்கு மேல் வரி செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மடத்தின் தலைமை அர்ச்சகர் சுவாமி மதுர் கிருஷ்ணாவும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
‘‘வரி செலுத்தாவிட்டால் பறிமுதல், ஜப்தி என அச்சுறுத்துவது தவறு’’ என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், துறவிகள் ஒன்று கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில், உ.பி. அரசின் நடவடிக்கையை அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தின் ஜசியா வரிக்கு ஒப்பிட்டு தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
துறவிகளின் முக்கிய அமைப்பான சனாதன தர்ம ரக் ஷா பரிஷத்தின் கடிதத் தாளைப் (லெட்டர் பேட்) பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள சுமார் 20,000 துறவிகளும், மடத்தின் தலைவர்களும் பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் ஆதித்யநாத்துக்கு கடிதங்கள் எழுதி வருகின்றனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் வாராணசி மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் வஸ்தவா கூறுகையில், ‘‘மடங்கள் மற்றும் கோயில்களிடம் இருந்து பெறப்பட்ட வரி விலக்கு கோரும் விண்ணப்பங்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு சொத்து வரி மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியின் நிர்ணயிக்கப்பட்ட விதிகளின்படி தண்ணீர் மற்றும் கழிவுநீர் வரி மட்டும் விதிக்கப்படும்’’ என்றார்.







