நியூஸிலாந்து – மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் 39 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் விளாசினார். ரோவ்மன் பவல் 33, ராஸ்டன் சேஸ் 28, அலிக் அதானஸ் 16 ரன்கள் சேர்த்தனர்.
165 ரன்கள் இலக்குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி 16.4 ஓவர்களில் 107 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது. டிம் ராபின்சன் 27, டேவன் கான்வே 13, ரச்சின் ரவீந்திரா 21, மார்க் சாப்மேன் 7, டேரில் மிட்செல் 13, மைக்கேல் பிரேஸ்வெல் 1, ஜேம்ஸ் நீஷாம் 11, சாக் ஃபோல்க்ஸ் 1, கைல் ஜேமிசன் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்த நிலையில் வெற்றிக்கு 20 பந்துகளில், 58 ரன்கள் தேவை என்ற நிலையில் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் போராடினார். மேத்யூ ஃபோர்டு வீசிய 18-வது ஓவரில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரையும் ஜேசன் ஹோல்டர் வீசிய அடுத்த ஓவரின் முதல் 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார் மிட்செல் சாண்ட்னர்.
அதிரடியாக விளையாடிய மிட்செல் சாண்ட்னர் 28 பந்துகளில், சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் சேர்த்த போதிலும் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது. முடிவில் 20 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ரோமாரியோ ஷெப்பர்டு வீசிய கடைசி ஓவரில் நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவையாக இருந்தன. முதல் 2 பந்துகளில் ரன்கள் சேர்க்காத சாண்ட்னர், கடைசி 4 பந்துகளில் 12 ரன்கள் சேர்த்தார். இதில் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி அடங்கும்.
ஒரு கட்டத்தில் நியூஸிலாந்து அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 70 ரன்கள் சேர்த்து வலுவாகவே இருந்தது. ஆனால் மேற்கொண்டு 37 ரன்களை எடுப்பதற்குள் 7 விக்கெட்களை கொத்தாக தாரைவார்த்தது. இதுவே அந்த அணியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் ஜெய்டன் சீல்ஸ், ராஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.














