மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதால் உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கண்டறிந்துள்ளது.
இதையடுத்து ‘சரியான உணவை உண்பது’ என்ற இயக்கத்தை தேசிய அளவில் முன்னெடுத்துள்ளோம். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் மூலம் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அதிக உப்பை தவிர்ப்பது, சத்தான உணவு உண்பதை வழக்கமாக்குவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தினசரி உணவில் படிப்படியாக உப்பு, சர்க்கரை, கொழுப்பு நிறைந்த உணவை குறைப்பது போன்றவை குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



