ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ‘சி’ பிரிவில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள், நேபாள அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த நேபாள அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தீபேந்திர சிங் ஐரி 47 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் சேர்த்தார்.
சோம்பால் கமி 26, லோகேஷ் பாம் 13, குல்ஷன் ஜா 11, ஆசிப் ஷெய்க் 11 ரன்கள் சேர்த்தனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தரப்பில் ஜேசன் ஹோல்டர் 4 ஓவர்களை வீசி 27 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினர். அகீல் ஹோசைன், மேத்யூ ஃபோர்டு, ஷமர் ஜோசப், ராஸ்டன் சேஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
134 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 15.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 134 ரன்கள் குவித்து, 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது 10-வது அரை சதத்தை கடந்த கேப்டன் ஷாய் ஹோப் 44 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 61 ரன்களும், ஷிம்ரன் ஹெட்மயர் 32 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் விளாசினர். முன்னதாக பிரண்டன் கிங் 22 ரன்களில் நந்தன் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். ஷாய் ஹோப், ஷிம்ரன் ஹெட்மயர் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தது.
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதல் இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஆட்ட நாயகனாக ஜேசன் ஹோல்டர் தேர்வானார். மேற்கு இந்தியத் தீவுகள் அணி தனது முதல் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தையும், 2-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தை 30 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றிருந்தது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வரும் 19-ம் தேதி இத்தாலியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
நேபாள அணிக்கு இது ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது. இதன் மூலம் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இன்றைய ஆட்டங்கள்:
- ஆப்கானிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் – இடம்: டெல்லி, நேரம்: காலை 11 மணி
- இங்கிலாந்து – இத்தாலி – இடம்: கொல்கத்தா, நேரம்: பிற்பகல் 3 மணி
- ஆஸ்திரேலியா – இலங்கை – இடம்: கண்டி, நேரம்: இரவு 7 மணி













