போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமித்தால்தான் மகப்பேறு இறப்பு குறையும்: அரசு மருத்துவர் சட்டப் போராட்ட குழு வலியுறுத்தல்

0
236

தமிழகத்தில் மகப்பேறு இறப்பை குறைக்க போதிய எண்ணிக்கையில் மருத்துவர்களை நியிமிக்காமல், ‘வார் ரூமை’ மட்டும் அமைப்பது தீர்வாகாது என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு மருத்துவமனைகளில் இருக்கும் குறைபாடுகளை சரிசெய்ய சுகாதாரத் துறை செயலாளர் சுப்ரியா சாஹு உத்தரவிட்டுள்ளார். துறையில் உள்ள அடிப்படை தேவைகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வை ஏற்படுத்தாமல் மாற்றம் காண முடியாது.

குறிப்பாக, தமிழகத்தில் கிட்டத்தட்ட கடந்த 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவமனைகளில் புதிதாக மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றார் போல மருத்துவர் பணியிடங்கள் உருவாக்க வேண்டும். அதுபோல செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கையும் மிகவும் குறைவாக உள்ளது.

நீண்டகாலமாக அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் மறுக்கப்படுகிறது. அதுவும் இருக்கிற அரசாணையை 354-ஐ அமல்படுத்துவதற்கே ஆண்டுக்கணக்கில் போராடி வருகிறோம். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களையும், செவிலியர்களையும் நியமனம் செய்யாமல், மகப்பேறு இறப்பை குறைக்க அவசர கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுவது எந்தவகையிலும் உதவாது.

தஞ்சாவூர், திண்டுக்கல், மயிலாடுதுறை, நாமக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. போதிய எண்ணிக்கையில் மகப்பேறு மருத்துவர்களை அரசு நியமிக்காததால், வேலைப்பளு மிக அதிகமாக உள்ளது.

ஒருபுறம் பணிச்சுமை. இன்னொரு புறம் சிறப்பு மருத்துவர்களுக்கு மிகவும் குறைவான ஊதியம் போன்ற நெருக்கடியை மருத்துவர்கள் சந்திக்கின்றனர். இதனால் பணியில் தொடர முடியாமல் பலர் விலகி விடுகின்றனர். இதனால் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது.

தனியாருக்கு தர கூடாது: மகப்பேறு இறப்பை குறைக்க ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 2,000-க்கும் மேற்பட்ட மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ‘சீமாங்க்’ மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில், தேவையான மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். 225 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை தனியார்மயமாக்கும் முடிவை அரசு முற்றிலும் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here