மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடிக்கு பேல்பூரி விற்ற நபருக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்க தேர்தலை முன்னிட்டு, ஜார்கிராம் நகரில் பிரதமர் மோடி கடந்த மாதம் 19-ம் தேதி பிரச்சாரம் செய்தார். அப்போது சாலையோர கடை ஒன்றில் பிரதமர் மோடி பேல் பூரி வாங்கினார்.
அந்த கடையில் இருந்த விக்ரம் சாவோ என்பவர் பிரதமர் மோடிக்கு மசாலா பொரி, வெங்காயம், மிளகாய், கடுகு எண்ணெய் ஆகியவை கலந்த பேல்பூரி செய்து கொடுத்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியதால், விக்ரம் சாவோ மற்றும் அவரது கடை பிரபலம் அடைந்தது.
இந்நிலையில் தனது செல்போனுக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து மர்ம நபர்கள் வீடியோ அழைப்பு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதாக விக்ரம் சாவோ புகார் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: எனக்கு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து மர்ம நபர்களிடமிருந்து வீடியோ அழைப்பு மற்றும் வாட்ஸ் ஆப் தகவல்கள் வருகின்றன.
முதலில் வாழ்த்து தெரிவிக்கும் அவர்கள், பின்னர், நீ இன்னும் உயிரோடு இருக்கிறாயா? உன்னை குண்டு வைத்து தகர்த்துவிடுவோம் என மிரட்டுகின்றனர்.
அவர்கள் பிரதமருடனான தொடர்பு குறித்து கேட்கவில்லை. ஆனால், பிரதமர் என்னை சந்தித்த பின்பே எனக்கு இந்த மிரட்டல்கள் வருகின்றன. இவ்வாறு விக்ரம் சாவோ தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸார், விக்ரம் சாவோ குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளனர்.
