Home உலக செய்திகள் மனைவிக்கு தங்கச்சங்கிலி வாங்கிய சிங்கப்பூர் தமிழருக்கு அதிர்ஷ்டம்: குலுக்கலில் ரூ.8 கோடி பரிசு விழுந்தது

மனைவிக்கு தங்கச்சங்கிலி வாங்கிய சிங்கப்பூர் தமிழருக்கு அதிர்ஷ்டம்: குலுக்கலில் ரூ.8 கோடி பரிசு விழுந்தது

0

மனைவிக்கு தங்கச்சங்கிலி வாங்கிய சிங்கப்பூர் தமிழருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. குலுக்கலில் அவருக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள பரிசு கிடைத்துள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் சிதம்பரம். தமிழரான இவரது பெற்றோர் தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் சென்று வசித்து வருகின்றனர். 21 ஆண்டுகளாக பாலசுப்பிரமணியம் சிதம்பரம் சிங்கப்பூரில் புராஜக்ட் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியிலுள்ள முஸ்தபா ஜுவல்லரிக்குச் சென்று தனது மனைவிக்காக 6 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் மதிப்பில் தங்கச் சங்கிலி வாங்கினார். இந்தக் கடையில் குறைந்தது 250 சிங்கப்பூர் டாலருக்கு பொருட்கள் வாங்குபவர்களுக்காக குலுக்கல் பரிசை அந்தக் கடை நடத்தி வந்தது. அந்த குலுக்கல் பரிசுப் போட்டியில் பாலசுப்பிரமணியம் பங்கேற்றார்.

தற்போது அவருக்கு அந்தக் குலுக்கலில் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பரிசு கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.8 கோடிக்கும் அதிகமானது இந்த பரிசுத்தொகை.

இந்த பரிசு கிடைத்தது குறித்து பாலசுப்பிரமணியம் சிதம்பரம் கூறியதாவது: இன்று என்னுடைய தந்தையின் 4-வது ஆண்டு நினைவு நாள். இந்தப் பரிசை அவரது ஆசீர்வாதமாகவே நான் கருதுகிறேன். இந்த தகவலை எனது தாய்க்குத் தெரிவித்து, அதில் ஒரு பகுதியை நான் சிங்கப்பூரில் தங்கியிருந்த பகுதியின் மேம்பாட்டுக்காக தானமாக தரப் போகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version