வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், டெல்டா உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். 14, 15-ம் தேதிகளில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. தென் தமிழகம், டெல்டா மற்றும் உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆனால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை தொடங்கவில்லை.
இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 9-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு உருவாகாமல் தாமதமாகி வந்தது. இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று மதியம் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழகம் – இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், நாளை முதல் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.
இன்று (நவ.12) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (நவ.13) மேற்கண்ட மாவட்டங்கள் மற்றும் ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
14-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 15-ம் தேதி மேற்கண்ட மாவட்டங்களில் (நீலகிரி, கோவை நீங்கலாக) ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
16, 17-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி,மீ, வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.