துபாய் வைர நிறுவனம் ஒன்றுக்கு கடன் வழங்க நீரவ் மோடி உத்தரவாதம் அளித்ததால், அவர் ரூ.100 கோடிக்கு மேல் செலுத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6,498 கோடி அளவுக்கு மோசடி செய்து விட்டு லண்டன் சிறையில் உள்ளார். அவரை இந்தியாவுக்கு அனுப்ப மத்திய அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அவர் மனித உரிமைகளுக்காக ஐரோப்பிய நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரம் வெளிவருவதற்கு முன்பாக கடந்த 2012-ல் துபாயைச் சேர்ந்த பையர்ஸ்டார் டைமண்ட் நிறுவனம் பாங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற நீரவ் மோடி உத்தரவாதம் வழங்கி உள்ளார்.
ஆனால் இந்நிறுவனம் கடனை திருப்பிச் செலுத்தாததால் சிபிஐ கடந்த 2018-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. நீரவ் மோடி உத்தரவாதம் அளித்ததால், அவர் அந்தக் கடனை அடைக்க லண்டன் சிறையில் உள்ள நீரவ் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதை எதிர்த்து லண்டன் வர்த்தக நீதிமன்றத்தில் நீரவ் மோடி மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்த லண்டன் நீதிமன்றம், பையர்ஸ்டார் குழும கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், தான் திருப்பிச் செலுத்துவதாக நீரவ் மோடி உத்தரவாதம் அளித்துள்ளதால், அந்நிறுவனம் திருப்பிச் செலுத்தாத ரூ.100 கோடியை பாங்க் ஆப் இந்தியாவுக்கு நீரவ் மோடி திருப்பிச் செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
