அரசியலமைப்பை பாதுகாப்போம் பிரச்சாரம்: ராகுல் காந்தி தொடங்கினார்

0
194

அரசியலமைப்பு சட்ட தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி நேற்று தொடங்கியது.

அரசியலமைப்பு சட்ட 75-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அரசியலமைப்பை பாதுகாப்போம் என்ற பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. ஜனவரி 26 வரை 2 மாதங்களுக்கு இப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.

டெல்லியில் நடைபெற்ற தொடக்க விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் மோடி படிக்கவில்லை என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியும். அவர் படித்திருந்தால் அவர் தினசரி என்ன செய்கிறாரோ அதை அவர் செய்ய மாட்டார். அரசியலமைப்பு சட்டம் ஒரு ஆவணம் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட இந்தியாவின் வாய்மை மற்றும் அகிம்சையின் விழுமியங்களை உள்ளடக்கியது.

நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பும் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக உள்ளது. தலித்துகள், பழங்குடியினர் மற்றும் ஓபிசி சமூகத்தினரின் பாதையின் குறுக்கே தடைகள் உள்ளன. இந்த தடைகளை அகற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முயற்சிகளை மேற்கொண்டது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், உணவுப் பாதுகாப்பு திட்டம் போன்றவை கொண்டு வரப்பட்டன. ஆனால் இந்த தடைகளை பிரதமர் மோடியும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் பலப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here