தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: – எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே ஒரே நாடு – ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதா மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 269 எம்பிக்களும், எதிராக 198 எம்பிக்களும் வாக்களித்தனர். இதனால் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை மோடி அரசால் பெற முடியவில்லை.
இந்த மசோதா நிறைவேற மக்களவையில் 362 எம்பிக்களும், மாநிலங்களவையில் 167 எம்பிக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். அதனால் தற்காலிகமாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு இந்த மசோதாவை அனுப்பி வைத்திருக்கிறது மோடி அரசு. இந்தியாவில் படிப்படியாக சர்வாதிகார ஆட்சியை கொண்டு வர வழிவகுக்கும் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தலைவர் ராகுல் காந்தி தலைமையில் வலிமையுடன் எதிர்ப்போம்! ஜனநாயகம் காப்போம். என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.














