‘டிராகன்’ வெற்றியைத் தொடர்ந்து ‘இதயம் முரளி’ படத்துக்காக தயாராகி வரும் நடிகை கயாடு லோஹர், சில புகைப்படங்களுடன் அப்டேட் தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“கடந்த இரு வாரங்களாக ‘டிராகன்’ பட ரிலீஸ் தந்த அனுபவம் அனைத்தும் நிஜமாகவே நம்பமுடியாத ஒன்றாக இருந்தது. இதற்கு நான் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். அதேநேரத்தில், இப்போது தமிழ்த் திரையுலகில் முதன்முதலாக லுக் டெஸ்டில் ஈடுபட்டது ஸ்பெஷல் தருணம். ‘இதயம் முரளி’ படத்துக்காகவே இந்த லுக் டெஸ்ட். ‘இதயம் முரளி’ மூலமாக உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அசாம் மாநிலம் திஸ்பூரை பூர்விகமாக கொண்டவர் கயாடு லோஹர். வளர்ந்தது படித்தது எல்லாம் மும்பையில்தான். 2000-ல் பிறந்த கயாடு, திரை உலகில் 2021-ல் கன்னட திரைப்படமான ‘முகில்பெடெட்’ மூலம் அறிமுகமானார். தொடர்ந்து மலையாளத்தில் ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’, தெலுங்கில் ‘அல்லுரி’, மராத்தியில் ‘I Prem U’ உள்ளிட்ட படங்களை முடித்துவிட்டு கோலிவுட்டில் நுழைந்திருக்கிறார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து, கயாடு லோஹர் இப்போது தமிழ்த் திரையுலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருகிறார். நாளுக்கு நாள் அவருக்கு ரசிகர் பட்டாளம் விரிவடைந்து வரும் அதேவேளையில், முன்னணி படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் மிகுதியாகி இருக்கிறது. தற்போது அவர் ‘இதயம் முரளி’ படத்துக்காக தயாராகி வருகிறார்.
டான் பிக்சர்ஸின் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து, இயக்கும் படம் ‘இதயம் முரளி’. இதில் அதர்வா முரளி நாயகனாக நடிக்கிறார். கயாடு லோஹர், பிரக்யா நாக்ரா, ரக்ஷன், பரிதாபங்கள் சுதாகர், ராபர்ட், ஏஞ்சலினா, ஜோனிதா காந்தி, இசை அமைப்பாளர் தமன், நிஹாரிகா, ப்ரீத்தி முகுந்தன் என பலர் நடிக்கின்றனர்.
கயாடு லோகர் தனது ‘டிராகன்’ படம் மூலம் 2கே கிட்ஸ் ரசிகர் பட்டாளங்களை ஈர்த்ததுடன், அதில் தனது முத்திரையைப் பதிக்கும் வகையிலான நடிப்புத் திறனை பதிவு செய்திருப்பதும் அவர் மீதான நம்பிக்கையைக் கூட்டியிருக்கிறது கவனிக்கத்தக்கது.