கருங்கல் அருகே வெள்ளியாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராபின்சன் மகன் ரெஜின் (30). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர் சில மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பினார். அதன் பின்னர் வெளிநாடு செல்லவில்லை. தற்போது கருங்கல் பகுதியில் ஒரு கோழிக்கடையில் வேலை பார்த்து வந்தார். ரெஜின் நேற்று நண்பர்களுடன் சேர்ந்து மடாலக்காடு அருகே கட்டபுளி என்ற இடத்தில் பனை மரத்தில் நுங்கு வெட்டச் சென்றுள்ளார்.
மரத்தில் ஏறிய ரெஜின் தடுமாறி மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக குளச்சல் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ரெஜின் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். கருங்கல் போலீசார் உடலைப் பிரேத பரிசோதனைக்குக் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














