கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத் தலைவர் நேற்றும் விசாரணை நடத்தினார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த வேலுசாமிபுரத்தை சேர்ந்த சுகுணா(65) என்பவர் நேற்று உயிரிழந்தார்.
இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. நேற்று முன்தினம் கரூர் வந்த நீதிபதி அருணா ஜெகதீசன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும், சம்பவம் நடந்த இடத்திலும் விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வேலுசாமிபுரம் வடிவேல் நகரைச் சேர்ந்த 2 வயது குழந்தையான குருவிஷ்ணுவின் வீட்டிலும், ஏமூர் புதூரைச் சேர்ந்த 5 பேரின் வீடுகளிலும், வடிவேல் நகர் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்த சுகன்யா வீட்டிலும் நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக நேற்று விசாரணை நடத்தினார். அப்போது, கூட்டத்துக்கு எப்படி சென்றார்கள், யார் அழைத்துச் சென்றது உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அவர் கேட்டறிந்தார்.
விசாரணை அதிகாரி மாற்றம்: காவல் துறை தரப்பில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கரூர் டிஎஸ்பி செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் திடீரென மாற்றப்பட்டு விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி (தலைமையிடம்) பிரேம் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.