இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா நாட்டின் பொக்கிஷம் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாராட்டி உள்ளார். ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதன் மூலம் டி20 உலகக் கோப்பையை 3-வது முறையாக வென்ற முதல் அணி என்ற சாதனையையும், சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் அணி என்ற சாதனையையும் இந்திய அணி படைத்தது. இந்திய அணியின் வெற்றிக்கு பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் (89), அபிஷேக் சர்மா (52), இஷான் கிஷன் (54) ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
இவர்களது அதிரடியால் இந்திய அணி 255 ரன்களை குவித்திருந்தது. இதேபோன்று பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 15 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட அக்சர் படேல் 3 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார்.
வெற்றிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: ஜஸ்பிரீத் பும்ரா, தலைமுறைக்கு ஒருமுறை உருவாகும் அபூர்வமான பந்துவீச்சாளர். அவரை நமது நாட்டின் பொக்கிஷம் என்று தான் கூற வேண்டும். தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.
வெற்றி உணர்வில் இருந்து வெளியே வர எனக்கு சிறிது நேரம் ஆகும். ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இது ஒரு நீண்ட பயணம். 2024-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு தான் இது தொடங்கியது. ஜெய் ஷா, ரோஹித் சர்மா ஆகியோர் என்னை நம்பி, அணியை வழிநடத்த வாய்ப்பு கொடுத்தார்கள்.
அங்கிருந்து இது ஒரு நீண்ட பயணமாக இருந்தது. தற்போது கோப்பையை வென்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம். 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் நாங்கள் பின்பற்றிய நல்ல விஷயங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்க நினைத்தோம். அதனை அணி வீரர்கள் அனைவரும் மிகச் சரியாகச் செய்தார்கள் அணியில் உள்ள வீரர்கள் என்ன திறன் கொண்டவர்கள் என்பதைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
அபிஷேக் சர்மாவிடமும், சஞ்சு சாம்சனிடமும் போட்டியை வெல்லும் திறன் இருப்பதை நான் அறிந்திருந்தேன். சரியான நேரத்தில் அது நடந்தது. சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகிய இருவரும் மிகச் சிறந்த வீரர்கள். அவர்கள் ஏதாவது சிறப்பாக செய்வார்கள் என்று நாங்கள் நினைத்திருந்தோம். இறுதிப்போட்டியில் அவர்கள் அதைச் செய்துகாட்டி உள்ளனர். இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.
‘அடுத்த இலக்கு ஒலிம்பிக்கில் தங்கம்’
சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து கூறும்போது, “ஒரு அணியாக சேர்ந்து நாங்கள் சாதித்தது எல்லாம் உங்கள் முன்னால் இருக்கிறது. அதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயமாக அடுத்த இலக்கு ஒலிம்பிக் போட்டிதான். 2028-ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும். அதே ஆண்டில் டி 20 உலகக் கோப்பையும் நடைபெறுகிறது. அதையும் மறக்கக்கூடாது.
2024-ம் ஆண்டு முதல் நடைபெற்ற விஷயங்களை பார்த்தால் மிகவும் உற்சாகமாக இருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் நாங்கள் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. தொடர்ந்து மூன்று ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளோம் (2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2025-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி).
கோப்பையை வெல்ல முடியாமல் நீண்ட காலமாக இருந்த வருத்தம் 2024-ல் முடிந்தது. அதற்குப் பிறகு நாங்கள் ஒருபோதும் பின்னோக்கி பார்க்கவில்லை. எப்படி விளையாட வேண்டும் என்று தெளிவு இருந்தது. 2024-க்குப் பிறகு எல்லாமே மாறிவிட்டது. 2025-ல் ரோஹித் ஷர்மா தலைமையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். அப்போது முற்றிலும் வேறுபட்ட வகையில் கிரிக்கெட்டை விளையாடினோம்.
இப்போது 2026-ல், சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்னிலையில் ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதனால் 2027, 2028, 2029-ம் ஆண்டிலும் இதையே தொடர்ந்து செய்ய வேண்டும். ஒருபோதும் நிறுத்தக் கூடாது” என்றார்.














