நடப்பு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜன்னிக் சின்னர், தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் உடன் சின்னர் பலப்பரீட்சை மேற்கொண்டார். உலக டென்னிஸ் வீரர்களுக்கான (ஆடவர்) தரவரிசையில் சின்னர் முதலிடத்திலும், ஸ்வெரேவ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-7(7), 7-6(2), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தினார் சின்னர். இதன் மூலம் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அவர் தக்கவைத்தார்.
கடந்த 25 ஆண்டுகளில் ரோஜர் ஃபெடரர், ஜோகோவிச், அல்கராஸ் ஆகியோருக்கு அடுத்ததாக விம்பிள்டனில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த நான்காவது வீரர் ஆனார் ஜன்னிக் சின்னர்.
“ஒவ்வொரு கிராண்ட்ஸ்லாம் தொடரும் வித்தியாசமானது. அதன் சூழல், அதில் விளையாடும் அனுபவம் உள்ளிட்டவை முற்றிலும் மாறுபடும். அந்த வகையில் இந்த தொடர் எனக்கு மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன். பாரிஸில் மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், இந்த தொடரில் சிறந்த போட்டியாளராக இருக்க விரும்பினேன்.
இந்த தருணத்துக்காக மிகவும் கடினமாக உழைத்தேன். இந்த நாள் அற்புதமானது. இப்போது மொத்தம் ஐந்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் என்னிடம் உள்ளது. அந்த ஐந்து நாட்களும் எனது வாழ்வின் பல நாட்களில் அடங்கும். இன்று சற்று கடினமாக இருந்தது. நான் தோல்வி அடைந்திருந்தாலும் அது சிறப்பான நாளே.
அல்கராஸ் காயத்திலிருந்து மீண்டு வருவார் என எதிர்பார்க்கிறேன். ஏனெனில், டென்னிஸ் விளையாட்டுக்கு அவர் தேவை. ஜோகோவிச் இன்னும் விளையாடி வருகிறார். இளம் வீரர்கள் பலர் வந்து கொண்டு இருக்கின்றனர். இது அனைத்தும் நன்மைக்கே” என்று வெற்றிக்கு பிறகு சின்னர் தெரிவித்தார்.
24 வயதான அவர், ஆஸ்திரேலிய ஓபன் (2024, 2025), விம்பிள்டன் (2025, 2026), அமெரிக்க ஓபன் (2024) ஆகிய தொடர்களில் பட்டம் வென்றுள்ளார். இன்னும் பிரெஞ்சு ஓபனில் மட்டுமே அவர் பட்டம் வெல்ல வேண்டி உள்ளது.
