ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதி களுக்கு உள்ளூர் மக்கள் ஆதரவு அளிப்பது ஒழிக்கப்பட்டுள்ளதால், தீவிரவாதிகள் பதுங்கு குழிகளில் தங்குகின்றனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்ட மலைப் பகுதியில் கடந்த வாரம் நடந்த என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் ஒரு பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் உணவுப் பொருட்கள், சிறிய கேஸ் அடுப்பு, குக்கர், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்து பொருட்கள் இருந்தன.
இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: தீவிரவாதிகள் முன்பு உள்ளூர் மக்கள் ஆதரவுடன் அவர்கள் வீட்டில் பதுங்கியிருந்தனர். தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால், தற்போது தீவிரவாதிகளுக்கு யாரும் ஆதரவு அளிப்பதில்லை.
இதனால் குல்காம், சோபியான், பீர் பாஞ்சல், ஜம்மு ஆகிய பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் தீவிரவாதிகள் பதுங்கு குழிகளை அமைத்து தங்குவது அதிகரித்துள்ளது. இதனால் தரைப் பகுதியில் ஊடுருவும் ரேடார்களை ட்ரோன்களில் பொருத்தியும், புவி அதிர்வு கருவிகளையும் பயன்படுத்தி தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்டறிய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.