டெல்லியில் குடும்பத்தினர் முன்னிலையில் விளையாடுவது சிறப்பான விஷயம் என்று நெதர்லாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி வீரர் ஆர்யன் தத் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆர்யன் தத். இவர் தற்போது நெதர்லாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது. போட்டியில் பங்கேற்பதற்காக நெதர்லாந்து அணியினருடன் ஆர்யன் தத்தும் வந்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கடந்த 2023-ம் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்தியா வந்திருந்தேன். அதன் பிறகு இந்தியா வருவதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் ஒரு உலகக் கோப்பை போட்டிக்காக இந்தியா வந்துள்ளேன். 19-ம் தேதி இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் மோத இருப்பது உற்சாகம் மிக்கதாய் உள்ளது.
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடுவது எனக்கு சிறப்பான விஷயம். டெல்லியில் எனது உறவினர்கள் இருக்கின்றனர். எனது குடும்பத்தாரும் இங்கு வந்துள்ளனர். எனவே, டெல்லி போட்டியில் எனது குடும்பத்தினர் முன்பு விளையாடுவது சிறப்பான விஷயம். எனது ஆட்டத்தை எனது குடும்பத்தார் பார்ப்பார்கள். நேரம் கிடைத்தால் அவர்களை மைதானத்தில் சந்தித்துப் பேசுவேன்.



